Monday, February 29, 2016

சரிந்து விழும் நிலையில் மோசூல் அணைக்கட்டு இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது.



ஈராக்கின் பாரிய அணைக்கட்டுக்களில் ஒன்றான மோசூல் அணைக்கட்டு சரிந்து விழும் அபாயம் உள்ளதாக ஈராக்கிய அரசாங்கம் மற்றும் அங்குள்ள அமெரிகத் தூதரகம் என்பன தனித்தனியாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

தைகிறீஸ் ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மோசூல் அணைக்கட்டு சரிந்து விழும் அபாயம் உள்ளதன் காரணமாக அப்பகுதியின் ஆற்றங்கரையருகே வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அந்த எச்சரிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று மாலை ஈராக்கிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “குறித்த ஆற்றங்கரையருகே வசிக்கும் மக்கள், அதிலிருந்து குறைந்தது 6 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் செல்ல வேண்டும் என ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறித்த அணை சரிந்து விழும் அபாயம் தீவிரமடைந்துள்ளது. ஆயினும் இது எப்போது நிகழும் என்பது தொடர்பில் துல்லியமான தகவலை எம்மால் தெரிவிக்க முடியாது. எனவே, முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மோசூல் அணையானது வட ஈராக்கிய நகரமான மோசூலில் இருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
Share:

0 comments:

Post a Comment

Text Ad

Blog Archive

Recent Posts

Unordered List

Pages

Theme Support